Thursday 25 April 2019

நீர் அற்ற நிலம் ...

                                          

இன்றைய முக்கிய செய்திகள் :
            ஏப்ரல் 12 ம் தேதி இரவு 11:59pm மணி முதல் நாட்டு குடிமக்களுக்கு "குடிநீர் "வழங்கப்படமாட்டாது என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதர செய்திகள்:
             நாட்டின் அனைத்து பகுதி மக்களும் குடிநீர் தேடி அலைவதால் நாட்டின் முக்கிய வீதிகளில் நெரிசல் அதிகரித்துள்ளது.
அறிவிப்புகள்:
             குடிநீரை வீணாக்கும் நபர்களுக்கு 10நாள் சிறை தண்டனையுடன் ரூபாய் 25000/- அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
             குடிநீரை பதுக்குவோர்கள் முன் அறிவிப்பின்றி நாடு கடத்தபடுவர்-வெளியுறவு துறை அமைச்சர் 

வணக்கம் நண்பர்களே!
           இது என்னடா புது கதையா இருக்குனு பாக்குறிங்களா? இது வேடிக்கை இல்லை உறவுகளே எச்சரிக்கை!
                  தென் ஆஃப்ரிக்காவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள, சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் கேப் டவுன் நகரத்தில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவீதத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மழை 1%அளவுக்கும் குறைவாகவே பொழிந்தது இதனால் தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு  ஒரு நாளைக்கு நூறு லிட்டர் தண்ணீர் அளித்துவந்த நிலை மாறி தற்போது வெறும் 50 லிட்டர் மட்டுமே அளிக்கப்படும் என கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு புதன் கிழமையும்(waterless Wednesdays) தண்ணீர் இல்லாத நாளாக எண்ணி, மக்கள் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

  ஏப்ரல் 12 ம் தேதி அன்று கேப்டவுன்னில் எந்த குழாயிலும் தண்ணீர் வாராது என்றும் அந்த நாளை 'ஸிரோ டே' (Zero Day)என்றும் கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.
''பொது இடங்களில் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கேப் டவுன் விமான நிலையத்தில் உள்ள விழிப்புணர்வு பதாகைகளில் தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், குறைந்த அளவு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் இல்லாததால், மால் போன்ற இடங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் கட்டாயமாக தண்ணீர் கொடுத்து அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,''.
தண்ணீர் மறுபயன்பாடு செய்வது ஊக்குவிக்கப்படுகிறது. 
'குளியலறையில் இருந்து வெளியாகும் தண்ணீரை, கழிவறைக்கு பயன்படுத்துகிறோம். புதன் கிழமைகளில், குளிப்பதற்குப் பதிலாக ஒரு பெரிய துண்டில் தண்ணீரை நனைத்து, உடலை துடைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது அல்லது கார் போன்ற வண்டிகளை தண்ணீரில் கழுவுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அந்நாட்டின் அரசு அறிவித்துள்ளது.மேலும் வீடுகளில் பாத்திரங்கள் கழுவும்போது, முதலில் எண்ணெய் கறைகளை காகிதத்தால் துடைத்துவிட்டு, பின்னர் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு பாத்திரங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை படித்தவுடன் "தண்ணீர் இல்லாமல் எப்படி இருப்பார்கள்" என்ற கேள்வி உங்கள் மனதில் எழும் என்பது எனக்கு தெரியும்!
அதனால் தான் உள்ளூர் வானொலி நிகழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் சமைப்பது எப்படி, கழிவறைகளில் தண்ணீருக்கு பதிலாக மரத்தூளைப் பயன்படுத்துவது எப்படி போன்ற தகவல்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
கேப்டவுன் நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிடுகின்றனர்.
அதன்படி, கை கழுவுவதற்கு பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்தினால் ஒரு நாளில் ஒருவர் இரண்டு லிட்டர் நீரை சேமிக்கலாம் என்று கூறியுள்ளது.
குறிப்பாக ஒவ்வொருவரும் அவர்களின் வீடுகளில் குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவதை கட்டாயமாக நிறுத்தவேண்டும். தண்ணீர் கசிவதை கண்டறியும் வழிகள், சரிசெய்ய அழைக்கவேண்டிய உதவி எண்கள் நகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி உலகின் முதல் நீர் அற்ற நகரமாக கேப்டவுன் நகரம் மாறிஇருப்பது இந்த ஒட்டுமொத உலகிற்கே அதிர்ச்சியான தகவல் மட்டுமல்ல எச்சரிக்கையும் கூட!
பொருளாதார முனேற்றம் மட்டுமே இலக்காக கொண்ட பல்வேறு சர்வதேச வல்லாதிக்க நாடுகள் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளை(நாடுகளை) ஆக்கிரமிப்பு செய்து அங்கு செறிந்துள்ள இயற்கை வளங்களை கொள்ளை கொள்வது இன்றைய பெரும் பணியாக செய்து கொண்டுள்ளார்கள்.
மனிதன் தான் எப்பொழுதுமே உலகின் மீதும் அதில் வாழ்கிற மற்ற உயிர்கள் மீதும் தன் ஆளுமையை நிறுவுகிறான்,இதன் காரணமாகவே இயற்கை நம் மீது பாரிய முறையில் தன் சீற்றத்தையும் அதீதமான கோவத்தையும் அவ்வபோது காட்டுகிறது என்கிற கூற்று மறுப்பதற்கில்லை..!
உலகின் பல்வேறு நாடுகள் இன்று நீர் பொருளாதார கொள்கைக்கு வந்து விட்டது.இன்னும் பத்து ஆண்டுகளில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீர் மற்றும் உணவு இருப்பு வைத்திருபவர்கள் பெயரே முன் நிற்கும்.
பல்வேறு நாடுகளும் இனங்களும் தங்களுக்கு உள்ள பலத்தினை பயன்படுத்தி தினம் தினம் பல்வேறு விதமான போர்களை செய்துகொண்டே இருக்கிறார்கள்.இரு பெரும் உலக போர்களையும் தாண்டி இந்த நூற்றாண்டில் பயணித்து கொண்டிருக்கும் மனித இனத்திற்கு இந்த பூமி பந்து தனக்கானது இல்லை என்கிற புரிதல் எப்பொழுது வரும் என்பது தெரியாது ஆனால் விரைவில் அந்த நாளுக்காகத்தான் காத்திருகின்றோம் என்பது மட்டும் நிதர்சனம்.
சர்வதேசத்தால் தான் உயர்ந்தவன் என்று கருதிக்கொள்ளும் அமெரிக்காவின் சூழலியல் அறிஞர் கூறுகிறார் "நாங்கள் நடத்தும் எந்த போரின் போதும் மனிதனால் ஒருபோதும் உருவாக்க முடியாத நீர் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த பட்டதில்லை.ஒரு வேலை எதிர்பாரா விதமாக நீர்நிலைகள் பாதிக்கப்பட்டால் அந்த நிலம் யாருக்கும் பயன்படவும் போவதில்லை" என்கிற செய்தியை கூறுகிறார்.
இதன்மூலம் நான் கூற வரும் செய்தி:பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான்.70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 
இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.அதற்கு மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் முன்னோர்கள் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? 
இப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.அதுமட்டுமா நாம் தேர்ந்தெடுத்த அரசே குடிநீரை விற்பனை பொருளாக சந்தை படுத்துவதுதான் கொடுமை!
எனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் தலையாய கடமை.
இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்பது அடிப்படை உண்மை, ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு
படுத்துகின்றோமே தவிர, வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து கொண்டே தங்களின் இருப்பை தக்கவைத்து கொள்கிறோம்.
வெறும் மனிதனுக்கான தேவை தான் என்பது போல தண்ணீரை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீணாக்குகிறோம் அனால் தண்ணீர் ஒட்டுமொத உயிர் தேவை என்பதை எப்பொழுது நாம் உணர்கிறோமோ அன்றுதான் நாளைய தலைமுறையின் நீர் தேவை உறுதி செய்யப்படும்.

இப்படியே போனால் இன்னும் சில நுாற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். 
மக்கள் குடிநீருக்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைதான் ஏற்படும். எனவே எம் அன்பான உறவுகளே இயற்கையை விற்பதும் வாங்குவதும் நம்மை நாமே கொலை செய்துகொள்வதாக ஆகும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தண்ணீரை சேகரிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற 
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

* பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு 
நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
* தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட 
வேண்டும்.
* வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க 
வேண்டும்.
* 'ஷவர்'ல் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. 'ஷவர்'ல் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
* வெயில் காலங்களில் 'ஷவர்'ல் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு குளித்தால் நீரினை சேமிக்க முடியும்.
* வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். குறைவான அளவுதுணிகளை மட்டுமே துவைக்கும் போது, அதிகமாக தண்ணீர் செலவாகும்.
* வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்
படுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.
* தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* லாரியில் தண்ணீரைபிடிக்கும்போது போட்டிபோட்டிக் கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து மண்ணோடு உன்னை இணைத்துக்கொள்
 ""உயிர் படைத்த உன்னை வதைத்தால் எப்படி வலிக்குமோ அதே போலத்தான் உயிர்களை படைத்த இயற்கையை வதைத்தாலும் வலிக்கும்""


என்றும் அன்புடன் 
   தமிழன் வீரமணி 

Saturday 16 March 2019

நான் ஒரு பைத்தியக்காரன்




வெள்ளியங்கிரி போய்விட்டு திரும்பியிருந்தேன்.நண்பர் ஒருவர் நான் பகிர்ந்திருந்த புகைப்படத்தையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார் ஏன் சிவன் அந்த மலையில் மட்டும்தான்...அதுவும் மலையுச்சியில் தான் இருக்கிறாரா?

அவரைப் பார்க்க அவ்வளவு சிரமப்பட்டு ஏழுமலை தாண்டி போய்தான் பார்க்கனுமா?அப்படி பார்த்தால்தான் அருள் தருவாரா?

பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம் 
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள் 
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே
அப்பிடினு சிவவாக்கியர் சொல்லியிருக்காரே..

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
...அப்படினு திருமூலர் சொல்லியிருக்காரே...

உனக்குள்ள சிவனை தேடுறத விட்டுட்டு.....
என்னய்யா ....இவ்வளவு படிச்சிருக்க நீயே இப்படி உடம்பை வருத்தி மலையேறி சிவனை பார்க்க போனேன்னு சொல்லுறயே...இப்படி இருந்தா எப்படி?என்றார் வினயமாக....

அவர் கேள்வியும் சரியாகத்தானே தெரிகிறது.....
ஆனால் ஏதோ ஒன்று குறைந்தது....பட்டென்று நான் கேட்டேன்...இவ்வளவு துல்லியமாக இறைவன் உடலினுள்ளே ....உள்ளத்துள்ளே...பாலில் நெய் கலந்தவாறு...கலந்துள்ளான் என்று பேசும் நீங்கள் உங்கள் உடம்பினுள்ளே உறுபொருளை கண்டுவிட்டீரா?என்றேன்.

அவர் திகைத்தார்.இல்லையென்று ஒப்புக்கொண்டார்.நான் தொடர்ந்தேன்...உடலினுள்ளே உறுபொருள் காண்பதற்கெல்லாம் இந்த மலையுச்சியை அடைய தேவைப்படும் சிரத்தையை விட பன்மடங்கு சிரத்தை வேண்டும்.

என்னை வாதத்தில் வெல்ல திருமூலரையும்,சிவவாக்கியரையும் அழைக்க வேண்டியதில்லை.நானே ஒப்புக் கொள்கிறேன்.இந்த மலையேற்றம் பைத்தியக்காரத்தனம் தான்.ஆனால் இந்த பைத்தியக்காரத்தனம் தரும் ஆன்மீக அனுபவம் அலாதியானது.

என்னைப் பொருத்தவரை அறிவாளிகளை விட பைத்தியக்காரர்கள் ஆண்டவனுக்கு சற்று நெருக்கமாக இருக்கிறார்கள் என்றேன்.

இறைவன் எப்போதும் வெளிப்படையாகவே உள்ளான்..அவன் உள்ளுக்குள் சதா காட்சியளித்துக் கொண்டுதான் உள்ளான்.அவனை காண்பதற்கு தடையே நான் தான்.நான் எனும் ஆணவம் தான்.மலையேற்றத்தின் தொடக்கத்தில் என் நான்(ஆணவம்)மலையைவிட பெரிதாக இருக்கும்.மலையேற மலையேற அந்த நான் சுருங்குவதை காணலாம்.

ஒவ்வொரு மலையாக கடக்கும் போதும் அனுமனது வாலைப் போல் இம்மலை நீள்வதாக பிரமை ஏற்படும்.ஒருசமயம் வரும் இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கமுடியாதென்று தோன்றும்.அப்போது கீழேயும் போக தெம்பிருக்காது.மேலேயும் போக இயலாது.அப்போது உள்ளம் கிடந்து அலறும் என்னை எப்படியாவது உன்னை தரிசிக்க வை.உன்னை நம்பியே வந்திருக்கிறேனென்று கெஞ்சும்..உன்னை அடைய நீயே சக்தி கொடு என்று இறைஞ்சும்... உள்ளத்து உறுதி உடையும்.கண்ணீர் வழிந்தோடும்.அப்போது இந்த மனமானதுஆற்றேன் எம் ஐயா..அரணே ஓ ..என்று போற்றி புகழும்...கதறி அழும்....

பிறகு உள்ளுக்குள் திடீரென்று ஒரு வைராக்கியம் பிறக்கும்..சக்தியும் பிறக்கும்...எப்படி போய் சேர்வோம்.என்று தெரியாது.இன்னும் நூறடி தூரத்தில் அவன் இருக்குமிடம் தெரியும் போது..காதலி பயணிக்கும் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்த பாரமெல்லாம் ஜன்னலோரம் அவள் உதிர்த்துவிட்ட சிறு புன்னகையில் மாயமாவதை போல் நடந்த களைப்பெல்லாம் மாயமாவதை உணர்வோம்.உச்சியை அடைந்த அந்த ஒரு கணம்.....ஆம் அந்த ஒரு கணம்....'எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு தெங்ஙனே என்ற சிவாக்கியம் மெய்யாவதை காணலாம்.

மேலும் மூலிகை வாசம்,சில்லென்ற காற்று,மேகத்தின் ஊடே பயணம்,மேகத்திற்கும் மேலே பயணம்,இரவு காடு தரும் திகில்......,இப்படி உபரி மகிழ்ச்சிகளுக்காகவும் வருடந்தோறும் பயணிக்கிறேன்.
(இது என் பயண அனுபவம் மட்டுமே)

-அவனருளால் அவன்தாள் வணங்கி...

Thursday 7 February 2019

புவி{உலகம்} வெப்பமயமாதல்..!

புவி வெப்பமயமாதல்:
                               புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது......
                                  சரி புவி வெப்பமயமாதல் பத்தி
 உலகத்துல ஏதோ ஒரு மூலைல 
ஆசிய கண்டத்துல, 
இந்திய நாட்டுல, 
தமிழ்நாடுன்னு ஒரு மாநிலத்துல, 
சேலம் மாவட்டத்துல,
மேட்டூர் வட்டத்துல,
கொளத்தூர் ஒன்றியத்துல,
தின்னப்பட்டி பஞ்சாயத்துல,
 இருக்குற ஒரு கிராமத்துல ஓலை குடிசைல வாழ்க்கை நடத்துற இந்த தமிழன் வீரமணி ஏன் பேசணும்னு யோசிக்காமல் இருக்க முடியாது உங்களுக்கு அப்படித்தான...!

உலக வெப்பமயமாதல்ல உங்க ஊரு சான் பிரான்சிஸ்கோ  என்ன எங்க ஊரு தின்னப்பட்டி என்ன எல்லாமே இந்த உலகத்துல தான இருக்கு..
சரிங்க நான் விடயத்துக்கு வரேன்..
           புவி வெப்பமயமாதல் இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான முக்கிய பிரச்சினையாகும். புவி வெப்பமயமாதல் 17000 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. அதற்கு
முன்பே கூட புவி வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானதாகும்.
                  மனித நாகரிகம் தோன்ற இந்த வெப்ப நிலை உயர்வு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. முதன் முதலாக உலகின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத் தொடங்கின. ஆங்காங்கே இருந்த ஏரிகளும், நீர்நிலைகளும் நதிகளாக மாறின. இதன் தொடர்ச்சியாக கோடான கோடி டன் பனிப்பாறைகளும் உருகி நதிகளாக ஓடி கடலில் கலந்து கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது(குமரிகண்டம் எனும் தமிழ் பேரினம் தாங்கிய கண்ட அழிவு  கூட இது போல இயற்கை காரணியாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது)
இன்றைய சூழலில் ருவநிலை மாற்றம் குறித்து இந்தியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 70 ஆண்டுகளில் அதிவேகமாக அதிகரித்து வருவதை உறுதி செய்திருக்கிறது.
1951-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இரு வெவ்வேறு வெப்பநிலை தரவுகளிலிருந்து, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையேயான வெப்பநிலை அதிகரிப்பைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக இந்தியா முழுவதும், 395 வானிலை ஆய்வு மையங்களில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன. கோடை, பருவ மற்றும் குளிர் காலகட்டங்களின் அன்றாட சராசரி வெப்பநிலை தரவுகளைக் கொண்டு அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
வடமேற்கு இந்தியாவில் 1970-களில் தொடங்கிய வெப்பமயமாதல், 2000-களிலும், 2010-களிலும் அதிவேகத்தில் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் – மே மாதங்களில் நிலவும் தினசரி அதிகபட்ச வெப்பநிலையின் பத்தாண்டு சராசரியானது, 2010-களில் 40°செல்சியஸ் முதல் 42°செல்சியஸ் அளவிற்கு இருந்துள்ளது. 1950-களில் மத்திய இந்தியாவின் தென்பகுதியிலுள்ள ஒரு சிறு பகுதியில் மட்டுமே இத்தகைய அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்துள்ளது. அதுவும் அதிகபட்சமாக 41°செல்சியஸ் அளவுக்கு மட்டுமே வெப்பநிலை இருந்தது. 1970-களில் தான் பெருமளவு நிலப்பரப்புகள் 40°செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையைத் தொட்டன.
1990களில் ஒரு குறுகிய காலகட்டத்திற்கு வெப்பநிலை தணிவடைந்தது. பின்னர், 2000-களிலும் 2010-களிலும் பெருமளவிலான நிலப்பரப்புகள், 40ºசெல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையை அடைந்தன. அதேபோல 41ºசெல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையை தொட்ட பகுதிகளும் அதிகமாகின. 2010-களில் மத்திய இந்தியாவின் தென்பகுதியில் பெருமளவு பரப்புகள் 42ºசெல்சியஸ் வெப்பநிலை நிலையைத் தொட்டன இதில் தமிழகத்திலும் தென் இந்திய நிலபகுதிகளிலும் மிகவும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே...
இந்த உலக (புவி) வெப்பமயமாதலுக்கு என்னதான் காரணம்?
3000 ஆண்டுகள் தொடர்ந்து பனிக்கட்டி உருகியதால் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வை விட இன்று ஒரு நூற்றாண்டில் ஏற்ப்படும் கடல் நீர் மட்ட உயர்வு அதிகம். தற்போது நாம் வெளியேற்றும்அதிகப்படியான கார்பன் மற்றும் அவற்றின் கூட்டுப்பொருள்களின் அளவினால் உலக வெப்பநிலை உயர்வு வேகமாகவும், அதிகமாகவும் நிகழ்ந்து வருகிறது.
விளைவு:
  20 ஆம் நூற்றாண்டில் மட்டும் 17 செ.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் இது மேலும் 18-50 செ.மீ உயரும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. கடல் நீர் மட்டம் உயர்ந்த பொது ஏராளமான உயிரினங்கள் அழிந்து போயின. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து கடல் நீர் மட்ட உயர்வினால் அழிந்த உயிரினங்களில்  மனித இனமும் ஒன்று. என்ற நிலை வரலாம்.
கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தையும் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறோம். இவைதான் நாம் அனுபவிக்கும் தட்பவெப்ப நிலைகள். ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. மழை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை இவையே ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் காரணிகள்.
சீதோஷ்ணநிலை மாற்றங்கள் திடீரென்றும், வெளிப்படையாகவும் ஏற்படும். ஆனால், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நீண்ட காலமாகும். அதனால் அந்தளவுக்கு உடனடியாக அவற்றை உணர முடிவதில்லை. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது. 
மனித நடவடிக்கையா ?
  பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன.  கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. அதனாலேயே அந்த வளிமண்டல அடுக்கு ஓசோன் எனவும் அழைக்கபடுகிறது..(இப்பதான் ஓசோன் ஓட்டை நியாபகம் வருதா? வரணுமே..)
நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள்[இரசாயன உர பயன்பாடு,இயந்திர பயன்பாடு] மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன.மேலும் மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓசோனை மிகவும் பாதிக்கின்றது.
அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கம் உணவுக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாடுகள், தட்பவெட்ப நிலை மற்றும் மழை ஆகியவற்றில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம், விவசாயத்தை நேரடியாக பாதிக்கிறது. மண்வளம், பூச்சிகள் மற்றும் நோய்களின் மாற்றங்கள் மூலமாக மறைமுகமாக விவசாயத்தை பாதிக்கிறது. தானிய வகைகளில் விளைச்சல் இந்தியாவில் வீழ்ச்சியடையும் என்று  ஆய்வுகள் கூறுகிறது . மிகக் கடுமையான வெப்பம், மிக அதிகமான மழை, வெள்ளம், வறட்சி முதலிய அதீதமான சீதோஷ்ண நிலைகளும் விளைபொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கின்றன.இது மனித இனத்திற்கு பெரும் சவாலாக அமைய போகிறது.[ மனிதன் மட்டும் அல்லாது நம்மோடு வாழ்ந்து நம்மை வாழ வைக்கின்ற இந்த பல்லுயிர் கட்டமைபுக்குமே சவால் தான்]
இதனால நமக்கு என்ன பிரச்னை :
 கடல் மட்ட உயர்வு. கடல்நீர் வெப்பமடைதல், பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இவை, கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போகுதல். வெப்பமயமாதல்  மனிதகுல ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாகும். உடலில் நீரிழப்பு, தொற்று நோய் பரவல், ஊட்டச் சத்துக் குறைபாடு, பொது மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பைப் பாதித்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.  காடுகள் மற்றும் வன விலங்குகள் இயற்கையான சூழலில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வெகு விரைவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பமாற்றத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்தால், பல்வேறு தாவர இனங்களும், விலங்கினங்களும் அழியக்கூடிய நிலை ஏற்படலாம்.இதில் மனிதன் விதி விலக்கு அல்ல என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன் எம் அன்பு மனித உறவுகளே..!
இவ்வுளவு பெரும் துயரை எப்படி மாற்றுவது?
பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது. சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது.அங்கிருந்து நீர் ஆவி மேகம் மழை என தம் அன்றாட பணிகளை செவனே செய்கிறது இயற்கை எனும் இப் பேரியக்கம் கொண்ட உருண்டை..!
நம்மால் முடிந்தது..

  1.  புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் உபயோகங்களைக் குறைத்துக்கொள்தல் (நிலக்கரி போன்ற எரிபொருட்கள்).
  2. எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முக்கியமாக பெரிய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைமண்டலத்தை மாசு கட்டுப் பாட்டு வாரியம் தடை செய்ய வேண்டும்.
  3. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களின் உபயோகத்தை அதிகரித்தல்- சூரிய மற்றும் காற்று ஆதாரங்கள் முதலியவை.
  4. அதிக அளவில் மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலும் மரங்களை வளர்த்தல்.
  5. மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களின் கண்மூடித்தனமான உபயோகத்தை தவிர்த்தல்.
  6. மின்சாதன பொருட்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துதல்.(குறிப்பாக கைபேசி,குளிர்சாதன பெட்டி,குளிரூட்டி போன்ற அதிக வெப்பத்தை வெளியேற்றும் பொருட்கள்)
இன்றைய சூழலில் நம் மனித இனம் தொழில் நுட்பத்தில் அதீத வளர்ச்சி கொண்டுள்ளது.ஆனால் மனிதனால் மனிதனை தவிர உலகில் வேறெதையும் உயர்புடன் உருவாக்க முடியாது என்பது அந்த தொழில்நுட்பத்திற்கும் தெரியும்..
இந்த மண்ணில் நேற்று பிறந்த அனைவருக்கும் இன்று பிறவா நாளைய சந்ததிக்கு இயற்கையை அப்படியே கையளிக்கும் ஆகச்சிறந்த பொறுப்பு இருப்பதை நாம் மறந்துவிட கூடாது..

மரங்களை காப்போம் :மனிதம் மீட்போம்
என்றும் அன்புடன்
தமிழன் வீரமணி....
















Tuesday 1 January 2019

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ! தமிழ் புத்தாண்டு வெறுப்பு !

ஆண்டு என்பது என்ன?
            ஒரு ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே ஒரு  வருடத்தின்  கால அளவாகும்.
தமிழ் இனத்தின்  புத்தாண்டு ...!
நாம் இன்று பெரிதும் அறிந்த பஞ்சாங்கத்தின் அடிப்டையில்  சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது வேறெந்த மொழிகளிலும் இதுபோல நேரத்தோடு கணிப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.
கொண்டாட்டம் ....!
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். 
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்
. வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
தமிழர்களின் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர்.
 அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.
 போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.
இப்படி உலகின் மிக பழமையான வானியல் முறையை அடிபடையாக வைத்து காலங்களை கணித்த நம் முன்னோர்களின் வாழ்வியலையும் விழாக்களையும் தவிர்த்து ஆங்கிலேய பழக்க வழக்கங்களில் மூழ்கி நம்மை நாமே சிதைத்து கொண்டிருக்கிறோம் என்பதே வேதனை...

ஆங்கில புத்தாண்டு....!
 ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரேக்கர்களின் ) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை [ஆங்கிலேயர்களில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் டிசம்பர் 25 -ம் நாள் அவர்களுக்கான புத்தாண்டு என அறிவித்தனர்-பின்பு இக்கருத்தும்  மாற்றப்பட்டது]  என்பதே உண்மை.

இன்றைய சூழலில் ஆங்கில மொழி ஒரு உலகப் பொதுமொழி. ரோமன் எண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள் காட்டியாக விளங்குகிறது ஆங்கிலப்புத்தாண்டு.
 இதனை மதம், மொழி, நிறம் வேறுபாடின்றி கொண்டு சிறப்பிபதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் தமது நாட்டின் அடிப்படை கலாசாரத்தை மறந்து தவறான வழிகளில் இன்றைய இளைஞர்கள் செல்வது சற்று மன சங்கடமான விடயமே...

.................வாழ்க தமிழ் ,வளர்க எம்மக்கள் ....


என்றும் அன்புடன் 
 தமிழன் வீரமணி