Sunday 3 January 2021

வள்ளுவனின் வகையறாக்களே...

 ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அன்னைத் தமிழ் சமூகத்தில் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருப்பானோ அகிலத்திற்கே அறம் சொன்ன எம் வள்ளுவன்.. 

அன்றைய தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தாடியோடு இருந்தானா, அவன் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினானா, மாளிகையில் இருந்து எழுதினானா, அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன், அவன் எந்த மதம், அவன் அடையாளம் என்ன, அவன் ஆண்ட பரம்பரையா, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா..? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவன் பிறக்கவில்லை.


சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்..

அவன் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற வார்த்தை இல்லை, ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.

எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் , எந்த ஓர் அடையாளத்துக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடன் எழுதப்பட்ட
இப்படி ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?

பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் வள்ளுவன்.

இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவன் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.

அப்படி என்றால் அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும். இத்தகைய படைப்பைப் படைக்க அவனுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?

இதைப் படைத்தவன் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்

அவன் சுற்றுச் சூழல்,
அவன் சொந்தங்கள்,
அவன் நண்பர்கள்,
அவன் கண்ட அரசர்கள்,
அவன் கொண்ட காதல்,
அவன் கற்ற கல்வி,
அவன் பெற்ற செல்வம்,
அவன் வாழ்ந்த மண்,
அவன் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவன் மொழி கற்ற அறிஞர்கள்,
அவன் உண்ட உணவு,
அவன் கண்ட கனவு

எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.

எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா...

இவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவன் அடையாளமாக இருக்கிறது. அன்று அவன் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, தேசம் என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம்,... தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சமா? இல்லை சாதிகள் செத்துப் போய்விடும் என்ற சுயநலமா?

உலகாண்ட இனமே உனக்கு இனியேதும் தடையா?நாங்கள் வள்ளுவனின் வகையறாக்கள் என வாஞ்சையோடு கூற...

திரு ஞான செருக்கு ..!

உலகப் பொதுமறை  என்று உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளை பற்றி நாம் அறிந்து கொள்ள சில தரவுகள்:

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

உலகில் வேறு எந்த மொழியில் இத்தனை சிறப்புகளை கொண்ட நூல் உள்ளது?

(அல்லது)

இந்நூல் கூறும் அத்தனை நெறிகளையும் கொண்ட ஏதேனும் ஒரு நூல் கூறுங்கள்.

அதனால் தான் இது தமிழனின் திரு ஞான செருக்கு...